காரைக்குடி கம்பன் விழா - விருந்தோம்பல்.
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்) அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து.
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை;
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா
நகரத்தார் காட்டுகிற நல்விருந் தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித்
தன்னலம் போக்கிய தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர்
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன்
காரைக் குடிமக்கள் காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு.
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து.
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில்
நேசமதை மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான்
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச்
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப்
பன்னினேன் நன்றியுரைப் பா.
வரதராசன். அ.கி.